Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…மருத்துவமனை தகவல்…!!!

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும்  இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
கோமா நிலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லியில் வசித்து கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84). கடந்த 9ஆம் தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்ததால், மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செய்த பரிசோதனையில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மருத்துவர்கள் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றினர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரணாப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதனால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக மருத்துவமனையில்  நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று  இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்தநிலையில், நேற்று முன்தினம் காலையில் அவர் நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்துள்ளார். ஆனால் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் நேற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில்தான் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இது பற்றி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மதிப்புக்குரிய பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் நேற்று காலையில் இருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் தற்போதும் நிலையாக உள்ளன’ என்று கூறியுள்ளனர். அதன் பிறகு தனது தந்தையின் உடல்நிலை மோசமடையவில்லை என பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மருத்துவ வாசகங்களில் இறங்காமல், கடந்த 2 நாட்களாக என் அப்பாவின் உடல்நிலை குறித்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் மோசமடையவில்லை. அவரது கண்கள் ஒளிக்கு எதிர்வினையாற்றுவதில் சிறிய முன்னேற்றம் உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |