சென்னை குடிநீர் வாரியம் சார்பாக கீழப்பாக்கம், வீராணம், செம்பரம்பாக்கம், புழல் சூரப்பட்டு நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. இதற்காக 300 இடங்களில் தினமும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவ மழை காரணமாக தற்போது 600 இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கீழ்பாக்கம், வீராணம், செம்பரம்பாக்கம், சூரப்பட்டு நீரேற்று நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோகநிலையங்களில் 11 டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் 12 லட்சம் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இதுவரை 10 லட்சத்து 40 ஆயிரம் குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் நீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் சேமிக்கும் பாத்திரங்கள், மேல்நிலை, கீழ்நிலை நீர் தேக்க தொட்டிகள், போன்றவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிப்பது மட்டுமல்லாமல் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் குடிநீர் வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.