இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் பெயரில் ராகுல்காந்தி நாடு முழுதும் பாத யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். கன்னியாகுமரியில் துவங்கிய ராகுலின் பாதயாத்திரை இப்போது ஆந்திரா சென்றுள்ளது. காஷ்மீர் வரையிலும் பாத யாத்திரையாக ராகுல் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அதாவது, 150 தினங்கள் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் 3,570- கி.மீ தூரம் நடந்தே சென்று காஷ்மீரில் தன் நடைபயணத்தை நிறைவுசெய்கிறார்.
இந்நிலையில் ராகுல்காந்தி தன் பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்திவிட்டு தேர்தல் நடைபெறவுள்ள இமாசலபிரதேசம் மற்றும் குஜராத்திற்கு போகவேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பியும் கோவா மாநில முன்னாள் முதல் மந்திரியுமான பிரான்சிஸ்கோ சர்தின்கா தெரிவித்து இருக்கிறார்.
பா.ஜ.க-வை வீழ்த்தும் ஒரேகட்சி காங்கிரஸ் மட்டுமே என அவர் கூறியுள்ளார். மேலும் பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சி அடிமட்ட அளவில் வளருவதற்கு அவசியமானது எனவும் அதே வேளையில் தேர்தல் நடைபெற இருப்பதால் ராகுல் அங்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இமாசலபிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.