நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, பா.ஜ.க. மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே எந்த பிரச்சினையும் கிடையாது. தொடர்ந்து நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியது ஏற்புடையது இல்லை.
எங்களுடைய தலைவர் அண்ணாமலை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் மொழிக் கொள்கையில் தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என அண்ணாமலையால் துணிச்சலாக சொல்ல முடிந்தது.
தமிழர்களுடைய மொழி உணர்வுக்கு பங்கம் வராமல் பா.ஜ.க. இருக்கிறது என்று சொன்ன அந்த அண்ணாமலையை பார்த்து மொழிக்கொள்கையில் இரட்டை நிலைபாடு, தமிழக மக்களுக்கு பா.ஜ.க. ஒன்னுமே செய்யவில்லை என பொன்னையன் பேசுவது மிகவும் தவறு. இவ்வாறு பேசியதற்கு அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் அ.தி.மு.க உரிய விளக்கம் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 4 பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களும், மின்சாரத்துறை, கல்வித்துறையில் நடக்கும் ஊழல் குறித்து சட்டமன்றத்தில் பேசி வருகிறோம்.