ஆப்கானிஸ்தான் நாட்டின் களநிலவரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தலீபான்களால் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலுள்ள வியான் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் அனஸ் மல்லிக் என்பவர் ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தலீபான்களால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது. தற்போது ஆப்கானிஸ்தான் காபுலில் மல்லிக் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை பாகிஸ்தான் தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். அல்கொய்தா அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக அவர் செய்திகளை சேகரிக்க சென்றார்.
இந்த நிலையில் சென்ற புதன்கிழமை இரவு முதல் பத்திரிக்கையாளர் மல்லிக் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. ஆப்கானிஸ்தான் சென்ற அவரை தலீபான்கள் கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அவருடைய நண்பர்கள் இத்தகவலை தெரிவித்தனர். மேலும் அவருடைய மொபைல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாகவும், அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என்றும் கூறினர். இதுகுறித்து பாகிஸ்தான் தூதரகம் தலீபான் அரசுடன் விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருடைய இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
அவர் தலைநகர் காபுலில் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. அதன்பின் அவருடன் தூதரகம் தொடர்பில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி உறுதிப்படுத்தி இருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக விடுவிக்கப்பட்ட பின் அனஸ் மல்லிக் தலிபான்களின் காவலில் இருந்த போது தான் அனுபவித்த துயரங்களை நினைவு கூர்ந்தார். இது பற்றி மல்லிக் கூறியிருப்பதாவது “கடந்த 3 ஆம் தேதி நான் காபூலுக்கு வந்தடைந்தேன். காபூலிலிருந்து பத்திரிகையாளர் என்பதற்கு தேவையான அனைத்து அங்கீகாரம் மற்றும் நற் சான்றிதழ்கள் என்னிடம் இருந்தது.
அப்போது அங்கு இருந்த சில தலிபான்களால் காரிலிருந்து இழுத்துச்செல்லப்பட்டு கடத்தப்பட்டேன். அத்துடன் எனது செல்போன் பறிக்கப்பட்டது. அதன்பின் நானும் என் கார் ஓட்டுனர் உட்பட்ட குழுவினரும் இரக்கமின்றி தாக்கப்பட்டோம். அதாவது எங்களை கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு தலிபான்களால் விசாரிக்கப்பட்டோம். அதனை தொடர்ந்து நான் ஒரு அறைக்கு மாற்றப்பட்டேன், மொழிபெயர்ப்பாளர் வந்ததும் நான் சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப்படுவேன் என என்னிடம் கூறப்பட்டது. நேற்று காலையில் என்னை விடுவித்தனர்” என அவர் கூறினார். அவருடைய கார் ஓட்டுநர் மற்றும் உள்ளூர் தயாரிப்பாளர் போன்றோர் இன்னும் தலீபான்களிடம்தான் இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.