பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கயிருந்த சூழ்நிலையில், இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தினைக் கலைத்தார். அவ்வாறு பாராளுமன்றத்தினைக்கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்டு தாமாகவே முன்வந்து வழக்குப்பதிந்தது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9ஆம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவின் அடிப்படையில் நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றம் கூடியது.
இந்தநிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத்குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி போன்றோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனிடையே எதிர்க் கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது. இதில் இம்ரான்கான் தோல்வியடைந்தார். இம்ரான் கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதன்பின் பாராளுமன்ற வளாகத்தைவிட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். இந்த நிலையில் இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. அதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தைவிட்டு இம்ரான்கான் வெளியேறினார்.