அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அனைத்து மாணவர்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவரின் தாய் ஆன்லைன் வழியாக கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் இது தொடர்பில் மனு ஒன்றை தயார் செய்துள்ள அவர் மற்ற மாணவர்களின் பெற்றோரிடமும் மனுவில் கையெழுத்து பெற்று வருகிறார். அந்த மனுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில், “குழந்தைகளின் வயது, தொற்று பரவல் விகிதம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவானது சர்வதேச வழிகாட்டுதலுக்கு எதிரானது. தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு மிக குறைவான அளவிலேயே ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளியில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட கூடாது. அவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் முக கவசம் அணிய வேண்டும். கோடை காலத்தில் முக கவசம் தொடர்ச்சியாக அணிந்தால் பூஞ்சை, பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.