மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவர்கள் மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜு என்ற வாலிபர் மாணவியை கடத்தி சென்று திருப்பூரில் தங்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று ராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.