மோசமான நிதி நிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் கடந்தும் தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகையை நிதி நிலை சரியானவுடன் வழங்குவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அப்படி என்றால் கலால் வரி, சொத்துவரி என்று பல மடங்கு வரிச்சுமையை மக்கள் தலையில் சுமத்தி, அதன் வாயிலாக அரசின் வருமானம் பெருகிவிட்டது என்று நிதியமைச்சர் கூறுவது பொய்யா..?
(அல்லது) இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிடமாடல் ஆட்சியில் அபார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது பொய்யா..?. பலமடங்கு வரியை உயர்த்தியும், மது விற்பனையை இருமடங்கு அதிகரித்தும் நிதி நிலைமை சரியாகவில்லை எனில் , அத்தனை மோசமான நிதி நிலைமையை வைத்துக் கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்?.. இலவசம் என்பது மறைமுகமான அடித்தட்டு மக்களின் வரிப் பணம்தானே? அவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்து விட்டு எதற்கு இலவசம் என்று ஏமாற்ற வேண்டும்..? என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.