ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் இணைந்து அந்த பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கி சூடு சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் லஸ்கர் – இ -தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.