மொபட் மீது லாரி மோதிய விபத்தில் மகன் கண்முன்னே தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறை புதுகாலனியில் பொம்மை வியாபாரியான கலியமூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் மகன் ஜோதி, பேரன் சூர்யா ஆகியோருடன் பொம்மைகள் வாங்குவதற்காக ஈரோடு நோக்கி சென்றுள்ளார். அங்கு பொம்மைகளை வாங்கி விட்டு மீண்டும் அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு காளைமாட்டுசிலையை கடந்து ரயில்வே நுழைவு பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக சென்ற லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலியமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.