மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்டேவிட்ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(23) என்ற நண்பர் உள்ளார். இருவரும் கோவையில் இருக்கும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் ஜான்டேவிட்ராஜ் அருணுடன் கோவையில் இருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள வீரராக்கியம் அருகே சென்று கொண்டிருந்த போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஜான்டேவிட்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஜான்டேவிட்ராஜை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.