மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ருத்திரன், தினேஷ் குமார் ஆகியோருடன் காவல்கிணறு பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் இரவு நேரத்தில் கோவிலில் தங்கி விட்டு நேற்று பகல் 12 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் விசுவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷ் குமார் மற்றும் ருத்திரன் ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.