Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நடுவர் கவனிக்கல..! பந்து இல்லாமல் த்ரோ….. ஐசிசி விதியை மீறினாரா விராட்?…. வங்கதேச அணி குற்றச்சாட்டு…. ரூல்ஸ் என்ன சொல்கிறது?

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி கையில் பந்தே இல்லாமல் வீசுவது போல பாவனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 184 ரன்கள் குவித்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கிட்டதால் 7 ஓவரோடு போட்டி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மீண்டும் மழை நின்றபின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 16 ஓவர் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கதேச அணி வீரர் நூருல் ஹசன் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். அதாவது வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது விராட் கோலி பந்து கையில் இல்லாமலேயே ரன் அவுட் எறிவது போல சைகை செய்து இருக்கிறார் என்பது தான் அந்த குற்றச்சாட்டு

ஆட்டத்தில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது அக்சர் படேல் 7ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஆப் சைடு திசையில் அடித்து விட்டு ரன் ஓடினார். பந்து நேராக எல்லைக்கோடு அருகே சென்றதும் அதனை பிடித்து அர்ஷ்தீப் சிங், தினேஷ் கார்த்திக்கிடம் வீசினார். ஆனால் அதற்கு இடையில் நின்ற கோலி தன் கையில் பந்து இல்லாத போதும் நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் பந்து வீசுவது போல ஒரு பாவனை செய்தார்.

இதனால் பேட்ஸ்மேன்கள் குழம்பியதாக தெரிகிறது. இதுகுறித்து நூருல் ஹசன் பேசியதாவது, நிச்சயமாக மழை விட்டதற்குப் பின் மீண்டும் போட்டி தொடங்கிய போது, மைதானத்தில் அதிக ஈரப்பதம் இருந்ததால் ஆட்டத்தில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. அதே சமயம் இந்த ஆட்டத்தில் ஒரு போலியான த்ரோவும் இருந்தது. இதன் மூலம் எங்களுக்கு 5 ரன்கள் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் துரதிஷ்டவசமாக எங்களுக்கு அது கிடைக்கவில்லை, என்றார்.

ஐசிசி விதி 41.5.1 ன் படி ஒரு பேட்டரை வேண்டுமென்றே கவன சிதறல் செய்ய தூண்டுவது, ஏமாற்றுவது, அவர் ஓடும் போது அவருக்கு குறுக்கே சென்று தடையாக நிற்பது உள்ளிட்டவை தவறான செயலாகும். எனவே அதற்கு பெனால்ட்டியாக பேட்டிங் அணிக்கு 5 ரன்களை கொடுக்கப்பட வேண்டும். அதேசமயம் எந்த ஒரு கவன சிதல் மற்றும் ஏமாற்றுதல் வேண்டுமென்றே செய்யப்பட்டதா? இல்லையா? என்பதை கள நடுவர்கள் தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஐசிசி விதி 41.5.2 கூறுகிறது.

ஆனால் நேற்றைய போட்டியில் இதனை நடுவர்கள் கவனிக்காத காரணத்தால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. ஒருவேளை வங்கதேச அணிக்கு இந்த பெனால்டி ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தால் முடிவு மாறி இருக்கலாம். ஏனெனில் இந்த போட்டியில் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.. மேலும் ட்விட்டரில் வங்கதேச ரசிகர்கள் போலி பீல்டிங் என கோலியை விமர்சித்து வருகின்றனர்.

Categories

Tech |