தந்தை இறந்த நிலையிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வந்து, அவருடைய உடலுக்கு மாணவி அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
கடலூர் மாவட்டம், சாவடி ஞானம்பாள் நகரில் வசித்து வந்தவர் சிவகுமார்(40). இவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் 15 வயதுடைய அவந்திகா. இவர் கடலூரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்சமயம் நடந்துவரும் அரசுப் பொது தேர்வை எழுதி வருகின்றார். இந்த நிலையில் சிவகுமார் கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் இறந்துள்ளார். இதில் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மாணவி அவந்திகா தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
அப்போது மாணவி நான் தேர்வுக்கு சென்று வந்த பின் தந்தை உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறேன். அதுவரை தந்தையின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று கண்ணீர் மல்க தனது சொந்த காரர்களிடம் கூறினார். இதைக்கேட்ட சொந்த காரர்களும் சம்மதித்தார்கள். இதனை அடுத்து நன்றாக படிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை நிறைவேற்றி மன உறுதியுடன் மாணவி அவர் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தந்தை இறந்த நிலையிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு வந்து அவருடைய உடலுக்கு மாணவி அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.