ஆன்லைன் மூலம் இன்ஜினியரிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்பகோட்டை பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓமனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் விடுமுறையை முன்னிட்டு தனது தாயை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் நண்பரான முரளிதரன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் பகுதி நேரம் வேலை பார்த்தால் 500 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை முரளிதரன் சிவகுமாருக்கு அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்ததும் வேலைக்கு முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்த சிவகுமார் லிங்கில் சென்று பார்த்துள்ளார். அப்போது குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால்தான் பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதன்படி கூகுள் பே மூலம் பணத்தைச் செலுத்திய பிறகு அவர்கள் பணி வழங்கியுள்ளனர். இதனையடுத்து செய்த பணிக்கு அவர்கள் பணம் வழங்கியதால் ஆன்லைன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என நினைத்து சிவகுமார் அடுத்தடுத்து பணத்தை கட்டி பணிகளை செய்து வந்துள்ளார்.
ஆனால் சில நாட்களில் எந்த பணமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிவகுமார் இணையதளத்தில் தேடி பார்த்த போது அந்த நிறுவனம் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதுவரை சிவகுமார் 89 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை செலுத்தி ஏமார்ந்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆன்லைன் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.