சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் கோரி 13.10. 2021 அன்று மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்களுக்கு தான் எழுதியிருந்த கடிதத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பண்டிகை கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒரு சில நாட்களுக்கு பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக் குறைந்த அளவிலான மாசு ஏற்படும் என்பதால் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று தமது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்காத போது தில்லியில் தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த தடையை மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்கள் நீக்குவதன் மூலமாக தமிழ்நாட்டில் சிவகாசியை சுற்றி உள்ள லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலை நம்பி இருக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட இயலும் எனக் குறிப்பிட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் @ArvindKejriwal அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/Df8atL8MsC
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 12, 2022