கொரோனாவால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 315 மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில், கொரோனாவால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 315 மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 96 பேர், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 92 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக 315 மாணவர்களில் 254 பேர் வட சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கை மிகுந்த சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.