தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் நேற்று திறக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் 108 பேர் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீர், மின்விசிறிகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பக்தர்கள் காத்திருப்பு கூடம் நேற்று திறக்கப்பட்டது. அதோடு 6 மாதங்களுக்கு பிறகு நேற்று கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு தொடங்கியது. அதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.