பக்தர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்த விபத்தில் பாதயாத்திரையாக சென்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் இடையப்பட்டியான் என்ற இடத்தில் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த வேன் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த 4 பக்தர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.