பகுதி நேர ஆசிரியர்களின் பணி முற்றிலும் தற்காலிகமானது என்று பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்யக்கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்களது போராட்டத்தை கண்டித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை.
மேலும் அந்த பணி நிச்சயம் தற்காலிகமானது என்பது பணி நியமன ஆணையிலேயே உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்த பகுதிநேர ஆசிரியர்களின் பணி தேவையில்லை என்று அரசு கருதினால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பகுதி நேர ஆசிரியர்கள் பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் அந்த பணியிடங்களுக்கு அவர்கள் ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகளே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.