சென்னை கிண்டி அருகே இருக்கும் இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலியான நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இரும்பு பலகை சரிந்து விழுந்ததில் மாநகர பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி சேதம் அடைந்தது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றதால், வாகன நெரிசல் ஏற்பட்டது. வார விடுமுறை நாள் என்பதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.