வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் சாலையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனத்துறை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலை அடிவாரத்தில் சிவப்பு நிறத்தில் நூல் கட்டப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த வனக்காவலர்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த நாட்டு வெடிகுண்டுகள் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டுள்ளதா, உள்ளாட்சி தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளதா இல்லையெனில் வேறு எதுவும் காரணங்கள் இருக்கின்றனவா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கபட்டிருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.