நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வருவாய்துறை அதிகாரிகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 161 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் சில வீடுகள் மற்றும் கடைகளை அகற்றினார்.
இதைத் தொடர்ந்து நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர். அப்போது சில பெண்கள் கூட்டமாக வந்த அதிகாரிகளிடம் எங்கள் வீடுகளை இடித்தால் நாங்கள் என்ன செய்வது எங்களுக்கு வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என கேட்டு கதறி அழுதனர். இந்த பெண்களை காவல் துறையினர் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் உதவியுடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.