உக்ரைன் போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனில் தலைநகரை பிடிக்கமுடியாத நிலையில், கிழக்கு உக்ரைனின் டான் பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போர் நிலவரம் தொடர்பாக உரையாற்றினார். அவர் கூறியதாவது “உக்ரைனில் இதுவரையிலும் 300க்கும் அதிகமான தேவாலயங்கள், பாரம்பரிய தளங்கள் ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பீரங்கிகள் நாடு முழுதும் 200 பாரம்பரிய இடங்களையும், 113-க்கும் அதிகமான தேவாலயங்களையும் அழித்துள்ளது.
அதுபோன்று தகர்க்கப்பட்ட தேவாலயங்களில், 2ஆம் உலகப் போரில் நாஜி படைகளை எதிர்த்து நின்ற தேவாலயங்களும் அடங்கும். அதேபோல் சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பின் கட்டப்பட்ட தேவாலயங்களும் அடங்கும். கடந்த 1991-க்குப் பின் கட்டப்பட்டவைகளும் இருக்கின்றன. 2ஆம் உலகப்போரை தாங்கி கடந்து நின்ற பழம்பெரும் தேவாலயங்களால், ரஷ்ய தாக்குதலை தாங்கி நிற்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு உக்ரைனில் ஸ்வியாடோகிர்ஸ்க் லாவ்ராவிலுள்ள பழமையான மடாலயத்தில் தீப்பற்றி எரிவதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. அங்கு 300 அகதிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், 60 குழந்தைகள் ஆகியோர் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அங்கு தீப்பற்றி எரிவதற்கான காரணம் ரஷ்யபடைகளின் தாக்குதல் தான் என உக்ரைன் ராணுவ அதிகாரி யூரிகோசேவெங்கோ பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் எரியும் மடாலயத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.