செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர்நகர் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் சந்திரா(72). இவரது கணவர் சுப்பிரமணி சென்ற சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இதில் சந்திரா பஜனை கோயில் தெருவிலுள்ள தன் மகன் வடிவேலுவுடன் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோயிலுக்கு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக சந்திரா சிங்கப் பெருமாள் அருகேயுள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்றுவருவார். அதன்படி வழக்கம்போல் சந்திரா சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் வீட்டுக்கு வராத நிலையில், காலை 8:30 மணிக்கு செங்கல்பட்டு தாம்பரம் இடையேயான ரயில் தண்டவாளத்தில் வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் மகன் வடிவேலுவுக்கு நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. அதாவது சந்திராதான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக அனைவரும் நினைத்துவிட்டனர். இதற்கிடையில் உயிரிழந்த மூதாட்டி உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் உருவம் ஒத்துபோணதால் உயிரிழந்தது தன் அம்மா தான் என வடிவேல் உறுதிசெய்துவிட்டார். இதனால் காவல்துறையினர் சந்திராவின் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். அதன்பின் சந்திரா உயிரிழந்ததாக நினைத்து அவரது உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவந்து இறுதிச்சடங்குகள் செய்துள்ளனர். மேலும் ஊர் முழுவதும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டபட்டு, மாலை மரியாதை உடன் தாரை தப்பட்டை முழங்க அந்த உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கப்படி இறந்தவருக்காக படையல் போட்டபோது மூதாட்டி சந்திரா வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்களுக்கு, மகிழ்ச்சியும் ஏற்பட்டது. சந்திரா திரும்பி வந்து விட்ட செய்தியை குடும்பத்தினர் உடனே காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இது பற்றி உறவினர்களிடமும், சந்திராவிடமும் தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்ததாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட நபர், உயிருடன் திரும்பி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.