வீட்டின் பீரோவை உடைத்து 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் செல்வா பகுதியில் கோவிந்தராஜன்-கலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி போந்தை கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் செல்வா நகரில் பால் பாக்கெட் போடும் நபர் கோவிந்தராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக கோவிந்தராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி கோவிந்தராஜன் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 28 பவுன் தங்க நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து கோவிந்தராஜன் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் 9 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.