வேளாங்கண்ணிக்கு வருகின்ற ரயில்கள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
நாகை- வேளாங்கண்ணி இடையேயான ரயில்பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனால் 12 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதையில் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் சென்ற இரண்டு வருடங்களாக நடந்து வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்தது.
இதையடுத்து ரயில்வே நிர்வாகத்தின் தொழில்நுட்ப பிரிவு மூலம் இருமுறை சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்ற 20-ஆம் தேதி தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர், மேலாளர் உள்ளிட்டோர் தலைமையிலான 50 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவின் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்தார்கள்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் வேளாங்கண்ணிக்கு வருகின்ற நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் தற்பொழுது மீண்டும் இயக்கப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்டம் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.