நிதி அமைச்சரே உங்களுக்கு தேர்தல் பயம் தொடரட்டும் என மதுரை எம்பி வெங்கடேசன் சரமாரியாக அவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைக்கப்பட்டதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று காலை மீண்டும் அந்த வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறுசேமிப்பு களுக்கான வட்டி குறைப்பு ஒரே இரவில் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து நிதி அமைச்சரே! தேர்தல் பயம் தொடரட்டும்! தேர்தல் பயம் உங்களின் ஆணையை மை உலர்வதற்கு முன்பு திரும்பப் பெற வைத்துள்ளது. தேர்தல் முடிந்து விட்டால் வாக்காளர் மை உலர்வதற்குள் மீண்டும் வட்டியை குறைக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.