அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வருபவர் நான்சி பொலேசி. இவர் அரசுமுறை பயணமாக மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் மலேசியா வந்தடைந்த நான்சிக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நான்சி சிங்கப்பூர் அதிபர், பிரதமரை சந்தித்தார். இந்த நிலையில் ஆசிய பயணத்தின் ஒருபகுதியாக நான்சி பொலேசி இன்று இரவு தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தைவான் போகும் நான்சி அந்நாட்டு அதிபர் டிசைங்க் வென்னை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து பிரிந்த தைவான் சுதந்திர நாடா அறிவித்துள்ள நிலையில் அதனை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. தைவான் தங்களது நாட்டின் ஒரு அங்கம் எனவும் தேவை ஏற்படும் பட்சத்தில் தைவான் மீது படையெடுத்து நாட்டுடன் இணைத்துக்கொள்வோம் எனவும் சீனா தொடர்ந்து மிரட்டி வருகிறது. சீனாவின் போர் விமானங்கள் அவ்வப்போது தைவான் எல்லைக்குள் நுழையும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அதேசமயம் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. இதனால் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி தன் ஆசிய பயணத்தின் போது இன்று தைவான் பயணம் மேற்கொள்வார் என வெளியான தகவல் ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
இதனிடையில் நான்சி தைவானுக்கு பயணம் மேற்கொண்டால் அதனை எங்கள் ராணுவம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயத்தில் நான்சி பொலேசி தைவானுக்கு போக உரிமை இருப்பதாகவும், இது தொடர்பான இறுதி முடிவை நான்சி தான் எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். அவ்வாறு நான்சி பொலோசி தைவானுக்கு செல்லும்பட்சத்தில் அது சீனாவுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி தைவான் மீது ராணுவ ரீதியில் தாக்குதலை நடத்தவும் வாய்ப்பு இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பயணம் சீனா – அமெரிக்கா இடையில் போரை ஏற்படுத்தவும் வழிவகுக்கலாம் என்பதால் உலகநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.