நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை தடைசெய்யும் பிரதமரின் அழைப்பை ஏற்று வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தில் விரிவான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 1ம் தேதி) முதல் கண்டறியப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிளாஸ்டிக் குட்சிகளுடனான இயர் பட்ஸ், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல், தட்டுகள், கோப்பைகள், முள் கரண்டி, கரண்டி, கத்தி, உறிஞ்சு குழாய், தட்டம், இனிப்பு பொட்டலங்களை சுற்றும் படலம், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட், பிளாஸ்டிக் அல்லது 100 மைக்ரோன்களுக்கு குறைவாக உள்ள பி.வி.சி பதாகைகள், கிளறு குச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.