403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு வருகின்ற மார்ச் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உட்பட பல்வேறு கட்சிகள் களமிறங்க இருக்கின்றன. ஆகவே தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. இதனிடையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அம்மாநிலத்தின் ஃப்ரூக்ஹாபாத் மாவட்டத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரசார கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியபோது நாங்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கொடுகிறோம். மேலும் ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கிறோம். இவ்வாறு சிறந்த அரசு இருந்தால் இது தான் நடக்கும். ஒருவேளை சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால் மக்கள் நலத்திட்டபணிகளுக்கான பணம் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு சென்று இருக்கும்” என்று கூறினார்.