இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த 26-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பண்டிகையின் முதல் 3 நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் வழிபடுவர். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது கோவில்களில் கொலு வைக்கப்படும். அதேபோன்று பெண்கள் தங்களுடைய வீடுகளில் கொலு வைப்பார்கள். இந்த கொலு பொம்மைகளை வைக்கும் முறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த கொலு பொம்மைகளை வைக்கும் போது படி அமைப்பார்கள். இந்த படி ஒற்றை வரிசையில் இருக்க வேண்டும். ஒரு மனிதன் ஆன்மீக சிந்தனைகளை அடைந்து படிப்படியாக இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் கொலு படிகள் உணர்த்துகிறது. இந்த கொலு பொம்மைகளை கடைசி படியிலிருந்து மேலே மேலே பொம்மைகளை வைக்க வேண்டும்.
அதன்படி முதலில் எல்லாவற்றிற்கும் முழு முதல் கடவுளான வினைகள் தீர்க்கும் விநாயகர் சிலையை மேலே உள்ள முதல் படியில் வைக்க வேண்டும். இந்த கொலு அமைப்பதற்கு 9 படிகளை அமைப்பது மிகவும் சிறப்பு. அதோடு 5, 7, 9 மற்றும் 11 எனவும் படிகளை அமைத்துக் கொள்ளலாம். இதனையடுத்து முதலாம் படியில் ஓரறிவு உயிர்களாக கருதப்படும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளையும், 2-ம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளையும், 3-ம் படியில் மூன்றறிவு உயிர்களாக கருதப்படும் எறும்பு, கரையான் போன்றவற்றின் பொம்மைகளையும், 4-ம் படியில் நான்கறிவு உயிர்களாக கருதப்படும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், 5-ம் படியில் ஐந்தறிவு உயிர்களாக கருதப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்கலாம்.
இதைத்தொடர்ந்து 6-வது படியில் மனிதர்களின் பொம்மைகளையும், 7-ம் படியில் சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் போன்ற மனித நிலையில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் பொம்மைகளையும், 8-ம் படியில் தேவர்கள், அஷ்டதிக் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் மற்றும் தேவதைகளின் பொம்மைகளையும், 9-ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வ சிலைகளை அவர்களின் தேவிகளோடு இருக்கும் விதமாக பொம்மைகளை வைக்கலாம். மேலும் நவராத்திரியின் 9 நாட்கள் முறையே பிரதமை, துவி திதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி மற்றும் 10-வது நாளில் விஜயதசமி என அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை அலங்காரம் செய்து மலர்களால் பூஜித்து பிரசாதம் படைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.