செகந்திராபாத்தில் இருந்து கவுகாத்திக்கு அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படுவா என்ற கிராமம் வழியாக சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் திடீரென நின்றது. அச்சமயம் இந்த ரயிலில் பயணம் செய்த சிலர் ரயிலை விட்டு கீழே இறங்கி அருகே இருந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் கொல்கத்தா நோக்கிச் சென்ற கொனார்க் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. அந்த விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரைப்போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.