நடிகர் சிம்பு நடிப்பில் இப்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகிறது. கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷனுக்காக சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியிருப்பதாவது, “வித்தியாசமான கதைகளில் நடிப்பதற்கு விரும்புகிறேன். மாநாடு திரைப்படம் அந்த முயற்சியில் வந்து வெற்றியும் பெற்றது.
மாநாடு திரைப்படத்தின் 2ஆம் பாகம் எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்று இன்னொரு மாறுபட்ட கதை அம்சத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் தயாராகியுள்ளது. சினிமாத்தனமாக இன்றி யதார்த்தமான படமாக இருக்கும். இவற்றில் 3 தோற்றங்களில் வருகிறேன். அதில் ஒன்று 19வயது இளைஞனாகவும் என்னை உருமாற்றி நடித்து இருக்கிறேன். ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இது வெற்றிபெற்றால் 2ஆம் பாகமும் வரும். ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் நடிப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.
இதன் வாயிலாக படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும். ரஜினி, அஜித் குமார், விஜய் என யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன். என் திருமணம் குறித்து யோசித்து நேரத்தை வீணாக்க விருப்பபடவில்லை. அது நடக்கிற சமயத்தில் நடக்கும். தற்போது நிறைய 2வது, 3வது திருமணங்கள் நடக்கிறது. சிலர் காதலித்துவிட்டு பின் பிரிகிறார்கள். மேலும் விவாகரத்துகளும் அவ்வப்போது நடக்கிறது.
இதில் யாரையும் குற்றம்சொல்ல முடியாது. ஆகவே இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நல்ல மணப்பெண் அமைய காத்து இருப்பதில் தவறில்லை. நல்ல மணப் பெண்ணுக்காக காத்திருக்கிறேன். ஒரு திரைப்படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். முத்தகாட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் ஆகியவற்றை என் படங்களில் திணிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கூடியவிரைவில் படம் டைரக்டு செய்வேன். இதற்கென 10 கதைகள் தயார்செய்து வைத்துள்ளேன்” என்று சிம்பு கூறினார்.