அண்ணா தொழிற்சங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நேர்காணல் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் “கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அப்பொழுது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திறம்பட செயலாற்றி அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அக்கழகம் எதிர்க்கட்சியான போதும் சிறிதும் தொய்வில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். திமுக அரசு எந்தவித குற்றச்சாட்டும் இன்றி இடமாறுதல் செய்யும் போக்குடன் செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்க தொழிலாளர்களின் எந்த சூழ்நிலையிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மேலும் 62 கழக எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இருந்தன. ஆனால் தற்போது 75 கழக எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் ஆசியுடன் உள்ளனர்.
குறைந்த வாக்குகளைப் பெற்றதால் நாம் எதிர்க் கட்சிகளாக உள்ளோம். இல்லாவிட்டால் நமது கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கும். நமது கழகம் வெற்றி பெற்றிருந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு 1500 ரூபாய் கிடைத்திருக்கும். மேலும் 6 இலவச கேஸ் சிலிண்டர்களை வருடந்தோறும் பெற்றிருப்பார். திமுக அரசானது பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் திமுக அரசானது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் திமுக, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலதிட்டங்களையும் முடக்குகிறது. குடும்ப வருமானம் 72,000 இருந்தால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயன் பெறலாம் என்று நம் கழகம் அறிவித்து இருந்தது. ஆனால் தற்பொழுது குடும்ப வருமானம் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மானிய விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு தடை செய்துள்ளது. மேலும் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க நகை கடன்களை நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலின் காரணமாக தள்ளுபடி செய்வதாக திமுக அரசு அறிவித்துள்ளது. மேலும் யாரும் பயன்பெறா வகையில் குளறுபடியான திட்ட அறிவிப்புகளை திமுக அரசு அறிவித்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.