கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியில் பேரநாயக்கன்பட்டியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய அன்பு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளான். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டியில் இருக்கும் கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பேருந்தில் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பும் போது அன்பு கண்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேர் சேர்ந்து எரங்காட்டுபாளையத்தில் இருக்கும் ஒரு கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அதன் பிறகு ஐந்து பேரும் சேர்ந்து கிணற்றுக்குள் இறங்கி குளித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து நண்பர்கள் நான்கு பேரும் கிணற்றை விட்டு வெளியேறிய நிலையில் அன்பு கண்ணன் மட்டும் வெளியேறாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நான்கு பேரும் அன்பு கண்ணனை கிணற்றுக்குள் இறங்கி தேடியுள்ளனர். அதன்பிறகு அன்பு கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி அன்பு கண்ணனை தேடியுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் அன்பு கண்ணனை கண்டுபிடிக்க முடியாததால் கிணற்றுக்குள் கண்காணிப்பு கேமராவை அனுப்பி வைத்துள்ளனர். அதன் மூலம் அன்பு கண்ணனின் உடல் கண்டறியப்பட்டு தீயணைப்பு துறையினர்களால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அன்பு கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.