நச்சலூர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கரூர் மாவட்டத்திலுள்ள கஸ்பா பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தனது வேலை நிமித்தமாக பெட்டவாய்த்தலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு இனங்கூருக்கு சென்று கொண்டிருந்தார். இது போலவே திருச்சி சிறுகமணியை சேர்ந்த சதீஷ்குமார், பெட்டவாய்த்தலையை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இனுங்கூரிலிருந்து பெட்டவாய்த்தலைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பங்காள புத்தூர் என்ற இடத்தில் வந்த பொழுது நேருக்கு நேர் மோதியதில் கருப்பையா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மற்றும் ராமேஷ் உள்ளிட்ட இருவரையும் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பின் ரமேஷை குளித்தலை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கருப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இவ்விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.