தேனிலவுக்காக வந்த புதுமண தம்பதியினரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேலுச்சாமி நகரில் விக்னேஷ்-கிருத்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் தேனிலவுக்காக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பின் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் தம்பதியினர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை கணவன் மனைவி இருவரும் மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் கொடைக்கானல் பில்லிஸ் வில்லா தெருவில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து புகை வந்துள்ளது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த புதுமண தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் இருந்து உடனடியாக கீழே இறங்கிவிட்டனர். அதன்பின் சிறிது நேரத்திலேயே மோட்டார் சைக்கிள் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.