கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரி பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகுல்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் செண்பகப்புதூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகுலை காணவில்லை. இதனால் உறவினர்கள் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரண்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகுலை தேடி வந்தனர்.
இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருக்கும் சுற்று சுவர் இல்லாத கிணற்றில் நக்குலின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.