சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு மாநாட்டினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். தொழில்துறையினர் சார்பாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் நடிகர்கள் ஜெயம் ரவி, ரமேஷ் அரவிந்த், ஜெயராம், நடிகை சுகாசினி, இயக்குனர் ராஜமவுலி, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோர் முதல்நாள் அமர்வில் கலந்துகொண்டுள்ளனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு, திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி , சமூகவலைதளங்கள் திரைப்படங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறைந்த பட்ஜெடில் பெருமளவில் வெளியாகும் தரமான படங்களுக்கான அங்கீகாரம் வழங்குவது எப்படி , ஒடிடி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி , பொதுமக்களை திரையரங்குகளை நோக்கி ஈர்ப்பது எப்படி உள்ளிட்டவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. 300 பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு விவாதிக்க இருக்கின்றனர்.
அதன்பின் நாளை நடைபெறக்கூடிய நிகழ்வில் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம், ஏ.ஆர் முருகதாஸ் போன்றோரும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, முதல்வராக பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆன நிலையில் தொழில் துறையில் முன்னேற்றம் காணவேண்டும் என்ற அடிப்படையில் துபாய், அபுதாபி சென்றுவிட்டு வந்தேன். அதனை தொடர்ந்து மாநில உரிமைகளை உரிமையுடன் கேட்க வேண்டும் என்ற நோக்கில் டெல்லி சென்று வந்தேன். பிறகு முதல் முறையாக கலைத்துறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றேன் என்பது பெருமை ஆகும். முதலமைச்சராக வந்து இருந்தாலும் ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவன். என் ஒருசில படங்களில் சில வேடங்களிலும் நடித்துள்ளேன். அத்துடன் நாடக மேடைகளிலும் பங்கேற்றுள்ளேன். இதன் காரணமாக ஆர்வத்துடன் தென் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் கலந்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்.