துருக்கி கடற்பரப்பில் 320 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளதாக அதிபர் கூறியுள்ளார்.
துருக்கி தனது நாட்டை சுற்றி இருக்கின்ற கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகிய பகுதிகளில் இயற்கை எரிவாயுவை கண்டறியும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு அந்த கடற்பகுதியில் அமைந்துள்ள கிரீஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டிற்கு சொந்தமான கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இயற்கை எரிவாயுவை கண்டறியும் வேலையில் துருக்கி ஈடுபட்டு வருவதாக கிரீஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் கிரீசின் குற்றச்சாட்டுகளையும் மீறி, துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துருக்கியின் கடல் பகுதியில் இருக்கின்ற கருங்கடலில் மிகப்பெரிய அளவில் இயற்கை வாயு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தாயூப் எர்டோகன் நேற்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” துருக்கியின் வரலாற்றில் கருங்கடலில் இருந்து மிகப்பெரிய அளவிலான இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளது. 320 மில்லியன் கன மீட்டர் அளவில் இயற்கை எரிவாயு இருப்பதனை துருக்கி கப்பல் கண்டறிந்துள்ளது. துருக்கி கடற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள இந்த இயற்கை எரிவாயு 2023 ஆம் ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். ருமேனியாவின் எல்லைப் பகுதியில் இருக்கின்ற கருங்கடலின் மேற்கு பகுதியில் துருக்கியின் ஃபடா கப்பல் கடலில் துளையிடும் பணியை மேற்கொண்டு வந்த போது, இந்த இயற்கை வாயு கண்டறியப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.