பெரம்பலூர் அருகே ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 பணத்தை வாகன சோதனையின்போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் சுரங்கம் மற்றும் கனிம துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பெரம்பலூர் கோரிபாளையம் 4 ரோடு சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பெரம்பலூர் பாளையம் மாதா கோவில் தெருவில் வசித்துவரும் ராமநாதன் என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆட்சியருமான பத்மஜாவிடம் ஒப்படைத்துள்ளனர்.