மோட்டார் சைக்கிள் விபத்தில் தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் இருக்கும் சீரடிபட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பிரகதாம்பாள் என்ற மனைவியும் அருளி, பாலபாரதி என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சக்திவேல் பக்கத்து ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சக்திவேல் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது படுக்கைவான் பட்டியிலிருந்து பருக்கைவிடுதி செல்லும் பகுதியில் மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.
அந்த மேம்பாலத்தின் அருகில் சக்திவேலின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த சக்திவேலின் உறவினர்கள் கந்தர்வகோட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.