ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ராக்கெட் பாய்ஸ் என்ற தொடரில் மன்னரைப் பற்றி அவதூறாக சித்தரித்திருப்பதாக மன்னரின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தற்போது தொலைக்காட்சி தொடர்களை போலவே இணையத்தில் வெப் தொடர்களும் மக்கள் அனைவராலும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ராக்கெட் பாய்ஸ் என்ற தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இத்தொடரை அபய் பன்னு இயக்கியுள்ளார். இத்தொடர் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நடந்த அறிவியல் ஆராய்ச்சி முன்னேற்றங்களை சொல்லும் கதையாக தயாராகியுள்ளது.
இதில் ஜிம் சர்ப் என்பவர் இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஹோமி ஜோ பாபா கதாபாத்திரத்திலும், இஷ்வக் சிங் டாக்டர் விக்ரம் சாராபாய் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பிரபல நடன கலைஞர் மிருணாளியாக ரெஜினா கஸாண்ட்ராவும், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் அப்துல்கலாம் வேடத்திலும் நடித்துள்ளார், இத்தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பலராம வர்மாவை அவதூறாக சித்தரித்துள்ளதாக பல எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.
அதாவது திருவிதாங்கூரில் உள்ள மோனோசைட் தாதுக்களை ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக சித்தரித்து அதில் மன்னரை தொடர்புபடுத்தின காட்சிகள் வருவதாக மன்னரின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி மன்னர் சித்திரைத் திருநாளின் மருமகள் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய், இந்தத் தொடரில் மன்னரை தொடர்புபடுத்தி உண்மைக்கு மாறான காட்சிகளை சித்தரித்து இருப்பதாகவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.