ஆந்திர மாநிலம் திருப்பதி-திருமலை இடையிலான போக்குவரத்திற்கு 2 மலைப்பாதைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்கும் மற்றொன்று திருமலையில் இருந்து திருப்பதிக்கு திரும்புவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ஆந்திரா மாநிலத்தில் மிக கனமழை பெய்தது. இதனால் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள மலைப் பாதைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது. திருமலைக்கு செல்லும் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அலிபிரி நடைபாதையில் பலத்த சேதமடைந்தது.
அம்மாநிலத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத மழையை கண்ட பக்தர்கள் மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இரண்டாவது மலை பாதை மூடப்பட்டு இரண்டு மலைகளுக்கு இடையில் இணைப்புப் பாதை திறக்கப்பட்டது. அதன் மூலம் வாகனங்கள் திருமலைக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து மலை பாதை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டது.ஐஐடி வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பாறைகள் உடைந்து விழுந்து அபாயம் உள்ள இடங்களில் ‘ராக்போல்ட்’ தொழில்நுட்பத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பொறியாளர் ஜெகதீஸ்வர ரெட்டி கூறியது, வருகின்ற 10 ஆம்.தேதி இரண்டாவது மலைப்பாதை பயன்பாட்டிற்கு வரும் அதற்குள் சீரமைப்பு பணிகள் முழுவதுமாக முடிந்து விடும் என்று உறுதியளித்துள்ளார். எனவே வருகின்ற 13ஆம் தேதியன்று வைகுண்ட ஏகாதசி நிகழ்வு நடைபெற உள்ளது. அப்போது சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்கள் சிறப்பு தரிசனத்திற்கு தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்துள்ளது.