பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை ரஜினி அரசியலில் இறங்கினால் தான் தனிமனிதாக வரவேற்பதாக பேசியுள்ளார்.
பா.ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் கோவை மாவட்டம் காரமடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அண்ணாமலை தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துள்ளது.
அந்த வகையில் மத்திய அரசு வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் உள்பட 17 திட்டங்களை ரூ.2.77 லட்சம் மதிப்பில் வழங்கியுள்ளது. எனவே ஏழைகளாக இருந்தவர்கள் நடுத்தர மக்கள் என்ற நிலையை அடைந்துள்ளனர். இதுபோல் நடுத்தர வர்க்கத்தினருக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் வசதியையும் செய்து கொடுத்துள்ளது. குடும்ப அரசியலையும், குறுநில மன்னர்களையும் மட்டுமே உருவாக்கியது திராவிட கட்சிகள். ஆனால் பா.ஜனதா நேர்மை, ஆன்மீகம், தேசியம் கலந்த பாதையை மட்டுமே உருவாக்கி கொடுத்துள்ளது. இந்துக்களையும், இந்துமதத்தையும் இழிவுபடுத்தி பேசிய திருமாவளவன் போன்றோரை மக்கள் வருகிற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ரஜினி அரசியலுக்கு வருவதை தனிமனிதாக நான் வரவேற்கிறேன் என்று கூறினார்.