அதிமுக கட்சியில் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அமைச்சர்கள் 3 பேர் இதுவரை நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணியம் ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சுப்பிரமணிய ராஜா நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தூத்துக்குடியிலும் அதிமுக நிர்வாகி ஒருவர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். முதல்வர் பழனிசாமி எச்சரிக்கையையும் மீறி தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளர் ராபர்ட் ஹென்ரி போஸ்டர் ஒட்டியதால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதாக மேலும் ஒரு முக்கிய அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.