டயர் வெடித்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ராஜசேகர்(34) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன் சக்கரம் வெடித்து தாறுமாறாக ஓடியது. அப்போது பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் மீது விழுந்தது.
இதில் துரைசாமி(40), நவீன்குமார்(38), கிருஷ்ணமூர்த்தி(23), முனுசாமி(52), சின்னபையன்(59), வசந்த்(20) ஆகிய ஆறு பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் மாற்று பேருந்து மூலம் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.