தெலுங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில் வீட்டுக்குள் சார்ஜில் வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென்று வெடித்து தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரகாஷ், மனைவி கமலம்மா, மருமகள் கிருஷ்ணவேணி போன்றோர் காப்பாற்ற முயன்றபோது பலத்த காயமடைந்தனர். இதில் பிரகாஷ் கடந்த ஒரு ஆண்டாக மின்சார ஸ்கூட்டரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக மின்சார ஸ்கூட்டர் மரணத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மின்சார வாகன உற்பத்தின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “இச்சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது கூற்றுப்படி இந்த வாகனம் நேரடியாக எங்களிடம் இருந்து விற்பனை செய்யப்பட்டதற்கான எந்தப் பதிவேடும் இல்லை. வாகனம் செகண்ட் ஹேண்ட் விற்பனை வாயிலாக வாங்கப்பட்டதா என்பதைச் சரிபார்த்து வருவதாக’ உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மின்சார இருசக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு விபத்துக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். அதன்பின் மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி இது தொடர்பாக கூறியதாவது, “தொடரும் மின்சார ஸ்கூட்டர் விபத்துகள் பற்றி விசாரிக்கவும், தீர்வு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கவும் நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம்” என்று அவர் டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.